விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூச்சலிட்ட பயணி- 541 பேரை உடனடியாக இறக்கி அதிரடி சோதனை

வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூச்சலிட்ட பயணி- 541 பேரை உடனடியாக இறக்கி அதிரடி சோதனை
Published on

கொல்கத்தா:

கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.

அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,

இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.

உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.

அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com