பள்ளி அறிவியல் ஆய்வகத்தில் விஷவாயு தாக்கி 25 மாணவர்கள் மயக்கம்

விஷ வாயுவை சுவாசித்த 25 மாணவர்கள் மயக்கமடைந்தனர்.23 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
பள்ளி அறிவியல் ஆய்வகத்தில் விஷவாயு தாக்கி 25 மாணவர்கள் மயக்கம்
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், சூர்யா லங்கா என்ற இடத்தில் விமானப்படை மையத்தின் சார்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது.

நேற்று காலை பள்ளிக்கு வந்த 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சி வகுப்பு நடந்தது. அப்போது அறிவியல் ஆசிரியர் குளோரோபில் மற்றும் எலுமிச்சை, உப்பு கரைசல் மூலம் பரிசோதனை செய்து மாணவர்களுக்கு காண்பித்தார்.

சில குறும்பு பிடித்த மாணவர்கள் ஆசிரியர் செய்து காண்பித்த கரைசலுடன் காப்பித்தூள், சர்க்கரை, உப்பு, சானிடைசரை கலந்தனர்.

அப்போது மாணவர்கள் செய்த கலவையில் இருந்து திடீரென விஷ வாயு உருவாகி ஆய்வகம் முழுவதும் புகைப்பரவி அருகில் இருந்த 7-ம் வகுப்பறைக்குள் சென்றது. விஷ வாயுவை சுவாசித்த 25 மாணவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக விமானப்படைத்தள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் வெங்கட் முரளி சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். ஆஸ்பத்திரியில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 23 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

2 மாணவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com