

பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஓபுளாபுரம் ஒட்டர் தெருவை சேர்ந்தவர் தயால்சுல்தான் காதர்சா ராவுத்தர். இவருடைய படத்துக்கு பதிலாக ஸ்மார்ட் ரேஷன் கார்டில் தேசிய கொடி படம் அச்சிடப்பட்டுள்ளது.
இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், ரேஷன் கடை ஊழியர்களிடம் சென்று முறையிட்டுள்ளார். அப்போது கடை ஊழியருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கடை ஊழியர் தாலுகா அலுவலகத்தில் செயல்படும் இலவச சேவை மையத்தில் சென்று மாற்றிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், வட்ட வழங்கல் துறையினரிடம் புகார் தெரிவித்தார். இதேபோல் பலரின் ஸ்மார்ட் கார்டுகளில் குடும்ப தலைவரின் பெயர்கள், புகைப்படங்கள் மாறி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு குளறுபடிகள் இல்லாமல் ஸ்மார்ட் கார்டுகள் அச்சடித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.