

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து முதல்-அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டது. அதன்பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தது. ஆனாலும் அவ்வப்போது கட்சிக்குள் ஒருசில சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்.பி தனது முகநூல் பக்கத்தில் அ.தி.மு.க இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை என்ற கருத்தை வெளியிட்டார்.
இது அந்த அணியினர் அதிருப்தியில் இருப்பதையே காட்டுவதாக உள்ளது.
இதுகுறித்து ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியது வருத்தம் அளிக்கிறது. மைத்ரேயன் எம்.பி கருத்தும், எனது கருத்தும் ஒன்றுதான். இருஅணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை. அது காலப்போக்கில் சரியாகிவிடும். தமிழக அமைச்சர்களுக்கு தற்போது நாவடக்கம் தேவை.
இது தொண்டர்களின் கருத்தாகும். ஜெயலலிதா இறந்தபிறகு தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரும், தனித்தனியாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இதனால் கட்சியில் குழப்பம் ஏற்படும்.
நாங்கள் தற்போது ஒன்றாக இருப்பதால் எங்கள் அணிக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.
திண்டுக்கல்லில் வருகிற டிசம்பர் 9-ந்தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்கிறது. இது அரசு விழாவாகும். கட்சி நிகழ்ச்சி அல்ல. எனினும் அழைப்பிதழ் வந்தால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பேன்.