பச்சை மரகதக்கல் நடராஜர் சிலையை கொள்ளையடிக்க முயற்சி- 2 பேருக்கு வலைவீச்சு

உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் புகுந்த 2 பேர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #NatarajarStatue
மரகதக்கல் நடராஜர் சிலை
மரகதக்கல் நடராஜர் சிலை
Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புண்ணியத் தலங்களில் ஒன்றாக விளகுங்வது உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில். மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற சிறப்புகளை இந்த ஆலயம் கொண்டுள்ளது.

நடராஜப்பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு. மற்ற கோவில்களில் நடராஜரின் கற்சிலைகள், பஞ்சலோக சிலைகளையே காண முடியும்.

ஆனால் இங்கு பச்சை மரகதக்கல்லால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை இருக்கிறது. இது 6 அடி உயரம் உடையது. இந்த சிலையின் வீரியத்தை பக்தர்கள் தாங்க முடியாது என்பதால், ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும். மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்று மட்டும் திருமேனி (சிலை) மீது சாத்தப்பட்ட சந்தனக்காப்பு களையப்படும்.

இன்று அதிகாலை கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் மரகதக்கல் நடராஜர் சிலையை கொள்ளையடிக்க முயன்றுள்ளது. வெளிப்புற கதவை உடைக்க முயற்சிக்கும்போது அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலித்தது.

இதையடுத்து அங்கு படுத்திருந்த காவாலாளி செல்லமுத்து (வயது60) எழுந்து பார்த்துபோது 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை தடுக்க முயன்றார்.

காயம் அடைந்த காவலாளி செல்லமுத்து

அலாரம் சத்தத்தை கேட்டதும் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்தனர். கோவிலின் முக்கிய இடங்களில் 6 வீடியோ கேமரா பொருத்தப்பட்டும் சன்னதி அருகே கேமரா இல்லாததால் கொள்ளையர்களை கண்டு பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கோவில் திவான் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது:-

கோவிலில் மரகத நடராஜர் சிலையை திருட முயற்சித்துள்ளனர். மற்ற படி எதுவும் திருட்டு போகவில்லை. தடுக்க சென்ற காவலாளி செல்லமுத்துவுக்கு காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com