பெண் கழுத்தை நெரித்து கொலை: கள்ளக்காதலர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கொல்லிமலையில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட அசோகன், மதியழகன்.
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட அசோகன், மதியழகன்.
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டூர் நாடு நத்துகுழிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ராஜாமணி (வயது42). கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி அரியூர் நாட்டில் உள்ள அம்பளகூடு பகுதியில் உள்ள முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வாழவந்திநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் இறந்து போன ராஜாமணிக்கு கட்டிட தொழிலாளர்களான திருச்சி மாவட்டம் நெட்டவேலம்பட்டி பகுதியை சேர்ந்த அசோகன் (24), கொல்லிமலை இலங்கியம்பட்டியை சேர்ந்த மதியழகன் (35) ஆகியோருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அசோகன் மற்றும் மதியழகனை ராஜாமணி தனித்தனியாக கட்டாயப்படுத்தி வந்து உள்ளார். எனவே கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து ராஜாமணியை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவர்கள் காட்டு பகுதியில் பிணத்தை வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அசோகன், மதியழகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட அசோகன், மதியழகன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com