

நாகாலாந்து மாநிலத்தில் இன்று பலத்த பாதுகாப்புடன் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்தனர். காலையில் சிறிது நேரம் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு பின்னர், விறுவிறுப்படைந்தது. 2 மணி நிலவரப்படி 57 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
மொத்தம் உள்ள 2156 வாக்குப்பதிவு மையங்களில் 1100 மையங்கள் பதற்றம் நிறைந்தவையாகவும், 530 மையங்கள் தாக்குதல் அபாயம் நிறைந்தவையாகவும் கணிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குச்சாவடிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மத்திய ஆயுதப்படையினரும் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். எனினும் ஒரு சில இடங்களில் அசம்பாவித சம்பங்கள் நடந்தேறின.