

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள்கூட்டம் இன்று நடந்தது.
இங்குள்ள அரங்கில் வைத்து கலெக்டர் ரோகிணி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார். அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமாரும் இருந்தார்.
அப்போது 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் கோரிக்கை மனுவுடன் அங்கு வந்தார். அவர் கலெக்டரிம் மனுவை கொடுத்தார். அதை வாங்கி கலெக்டர் ரோகிணி படித்துக் கொண்டிருந்தார். திடீரென்று மனு கொடுத்தவர் தன் காலில் மாட்டியிருந்த செருப்பை கழற்றி கலெக்டர் தலையில் வைக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் ரோகிணி ஓவென்று கத்திய படி அங்கிருந்து ஓடினார். உடனே அந்த நபர் அங்கிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் தலையில் செருப்பை வைத்தார். இதனால் கலெக் டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் மீது செருப்பை வைக்க முயன்றவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்ற காட்சி.
போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தன் பெயர் ஆறுமுகம் என்றும், தான் ஒரு டாக்டர் என்றும் கூறினார். அவர் கூறியது உண்மைதானா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டு உளறுகிறாரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.