

முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு கிராமத்திலிருந்து கற்பகநாதர்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலை சுமார் 2கிலோமீட்டர் சாலையாகும். இதில் 40-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. இந்த வழியாகத்தான் மேலதொண்டியக்காடு, மேலக்காடு, புதுக்குடி, முனங்காடு ஆகிய பகுதிக்கு செல்லும் மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி இப்பகுதியில் குறிப்பட்ட நேரங்களில் மட்டும்தான் ஒரு அரசு பேரூந்து மற்றும் ஒரு தனியார் மினி பேரூந்தும் சென்று வருகிறது. அதுவும் சில சமயங்களில் வரவில்லை என்றால் இப்பகுதி மக்கள் அவதிப்படுவது வாடிக்கையாக உள்ளது.
இப்பகுதி மக்கள் பெரும்பாலானவர்கள் சைக்கிள் மூலமாகவும் மற்றும் நடைபயணத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மாலை நேரத்திற்கு பிறகு இந்த பகுதியில்தான் பாதுகாப் பற்ற நிலையில் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.
இந்த சாலையில் உள்ள தெரு விளக்குகள் ஒருவருடமாக எரியவில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக இப்பகுதி கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளது.
இரவில் சில பகுதியில் உள்ள கரடுமுரடான இந்த சாலையில் பயணிப்பவர்கள் தினந்தோறும் விபத்துக்களில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இரவில் மாணவிகள் மற்றும் பெண்கள் இப்பகுதியில் செல்ல பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
எனவே இந்த தெருவிளக்குகளை உடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews