ஆர்.கே.நகர் தொகுதியில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும்: முத்தரசன் பேட்டி

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்றால் தி.மு.க. வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் கூறினார்.
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் இன்று தர்மபுரி மாவட்டம் இண்டூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதவாத சக்திகளை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. இடது சாரி கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் ஆதரிக்கிறது.

ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்றால் தி.மு.க. வெற்றி பெறும். தேர்தல் கமி‌ஷன் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றால் தேர்தலை முறையாக நடத்தி ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.

கடந்த இடைத்தேர்தலில் 89 கோடி பணம் பட்டுவாடா நடைபெற்றதாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டு தேர்தல் நிறுத்தப்பட்டது.

இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் பணம் கொடுத்தால் தேர்தலை நிறுத்தி விடுவோம் என்று கூறுவது சரியில்லை. பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தலை நிறுத்தி விடுவோம் என்று கூறுவது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விடும்.

எனவே ஆர்.கே.நகர் தொகுதியில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com