

பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த முஷரப் 2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அந்நாட்டின் அதிபரானார். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி நெருக்கடி நிலையை அறிவித்தார். டிசம்பர் 15-ந் தேதி வரை நெருக்கடி நிலை அமலில் இருந்தது.
2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றதும், தனது ஆட்சியை புரட்சி மூலம் கைப்பற்றியதற்காகவும், நெருக்கடி நிலையை கொண்டு வந்ததற்காகவும் முஷரப் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தார்.
2016-ம் ஆண்டு சிகிச்சைக்காக துபாய் சென்ற முஷரப் பின்னர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை. விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முஷரப் மீதான தேசத் துரோக வழக்கை விசாரிக்க இஸ்லாமாபாத்தில் சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டது. இவ்வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு 6 ஆண்டுகளாக விசாரித்து வந்தது. கடந்த 17-ந் தேதி முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மரண தண்டனைக்கு எதிராக லாகூர் ஐகோர்ட்டில் முஷரப்பின் வழக்கறிஞர் அஸார் சித்திக்கி இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் பாகிஸ்தான் அரசு மற்றும் அரசு அதிகாரிகள் எதிர் மனுதாரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.
முஷரப்பின் வழக்கறிஞர் தாக்கல் செய்த 86 பக்கங்களை கொண்ட மனுவில், மரண தண்டனை விதித்த திர்ப்பில் முரண்பாடுகளும் எதிர்மறையான கருத்துகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.