கொலை வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்- திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு

கொலை வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கொலை வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்- திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சாந்தி (வயது 20). இவர், கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதி வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மனோகரனுக்கும் (33) இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அந்த சமயத்தில் சாந்தியின் வீட்டிற்கு வந்த அவரது உறவினர் தேனிமலையை சேர்ந்த முருகன் (35), மனோகரனை தட்டி கேட்டு உள்ளார்.

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மனோகரன், முருகனை தள்ளியுள்ளார்.

இதில் கீழே விழுந்த முருகன் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதிசாய்பிரியா விசாரணை நடத்தி தீர்ப்பு அளித்தார். அதில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள மனோகரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com