

திருவனந்தபுரம்:
கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்தபிறகு அங்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த மாத (ஜூன்) இறுதிக்குள் கேரளாவில் உள்ள அனைத்து பஸ், லாரி, ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் உள்பட அனைத்து மோட்டார் வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
கேரள மாநில மோட்டார் வாகன போக்குவரத்து துறையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு கேரள மோட்டார் வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்த உத்தரவை கண்டித்து அவர்கள் வருகிற 18-ந்தேதி ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர். கேரள மோட்டார் வாகன பாதுகாப்பு அமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அரசு இந்த உத்தரவை திரும்ப பெறாவிட்டால் 18-ந்தேதி மாநிலம் முழுவதும் எந்த மோட்டார் வாகனமும் ஓடாது என்று அவர்கள் அறிவித்து உள்ளனர்.
இந்த போராட்டத்தில் பஸ், லாரி, ஆட்டோ, டாக்சிகள் போன்ற மோட்டார் வாகனங்கள் பங்கேற்கும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர். இந்த ‘ஸ்டிரைக்’ காரணமாக கேரளாவில் போக்குவரத்து முடங்கும் என்பதால் இது தொடர்பாக மோட்டார் வாகன பாதுகாப்பு அமைப்பினருடன் அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.