

சென்னை:
தண்டையார்பேட்டை கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளராக உள்ளார்.
இவரது மகன் கோகுல் (18). கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ.எல்.எல்.பி. படித்து வந்தார். இவரது நண்பர் யோக பிரகாஷ்.
இவர்கள் இருவரும் நேற்று இரவு 12.45 மணியளவில் ராயபுரத்தில் உள்ள நண்பர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு எண்ணூர் விரைவு சாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை யோகபிரசாத் ஓட்டியுள்ளார். மோட்டார் சைக்கிள் திருவொற்றியூர் பட்டினத்தார்கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் இருந்து வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த கோகுல் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவர் கை - கால் உடைந்து பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் மகேந்திரன் (29) என்பவரை கைது செய்தனர்.