பூர்வீக சொத்தை அபகரித்துவிட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி

பூர்வீக சொத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டதாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு அப்பாஸ்கான் தீக்குளிக்க முயன்றபோது எடுத்தபடம்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு அப்பாஸ்கான் தீக்குளிக்க முயன்றபோது எடுத்தபடம்.
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள காரிக்கூட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது களஞ்சியம் என்பவரின் மகன் அப்பாஸ்கான். இவரது குடும்பத்திற்கு சொந்தமான பூர்வீக நிலம் காரிக்கூட்டத்தில் உள்ளது. இந்த சொத்தினை அதே பகுதியை சேர்ந்த சிலர் அதிகாரிகள் துணையோடு பட்டா மாற்றம் செய்து விற்பனை செய்ய முயன்று வருகிறார்களாம்.

நிலத்தை அபகரித்தது தொடர்பாக கேட்டபோது நிலத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்களாம். இதனை தொடர்ந்து நேற்று காலை அப்பாஸ்கான் தனது தாய் பாத்திமா பீவி மற்றும் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். தனது நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி தாய் மற்றும் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துகொள்ள முயன்றார். இதனை கண்ட அங்கிருந்த தனிப்பிரிவு காவலர் குமாரசாமி மண்எண்ணெயை பறித்து காப்பாற்றினார். உடனடியாக அவரை பத்திரமாக மீட்டு கலெக்டர் வீரராகவராவிடம் அழைத்து சென்றனர். தனது பூர்வீக சொத்தை மீட்டு தருவதோடு அபகரித்த நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார்.

அப்போது கலெக்டர், அவர்களிடம் “எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. சட்டப்படி உரிய தீர்வு காண பல வழிகள் உள்ளன. உங்களின் இந்த முடிவு மற்றவர்களுக்கு முன்உதாரணமாக இருந்து விடக்கூடாது. நாம் மற்றவர்களுக்கு நல்ல செயல்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறியதோடு இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com