கேரளாவில் காயங்களுடன் 7 வயது மகள் உயிரிழப்பு - தாய் கைது

கேரள மாநிலம் திருச்சூரில் விபின் என்பவரது 7 வயது மகள் காயங்களுடன் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தாயை போலீசார் கைது செய்தனர். #MotherArrested
மகள் ஆவணி, தாய் சைனிமோல்
மகள் ஆவணி, தாய் சைனிமோல்
Published on

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி குன்னம்பள்ளியை சேர்ந்தவர் விபின் (வயது 47). இவரது மனைவி சைனிமோல் (36). இவர்களது மகள் ஆவணி (7). விபின் துபாயில் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று சிறுமி பலத்த காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். சாலக்குடி போலீசார் சிறுமியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகள் இறந்தது குறித்து துபாயில் இருக்கும் விபினுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

மகளின் சாவில் மர்மம் உள்ளதாக போலீசில் புகார் செய்தார். மகள் உயிரிழந்தது குறித்து அவரது தாய் சைனிமோலிடம் விசாரணை நடத்தியபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

சந்தேகம் அடைந்த போலீசார் சாலக்குடி கோர்ட்டு உத்தரவு பெற்று திருச்சூர் மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றபோது தாய் சைனிமோலை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதலில் மகளை கொன்று மனநல பாதிப்பு போல் நடிக்கிறாரா? அல்லது வேறு காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #MotherArrested

X

Maalai Malar
www.maalaimalar.com