

புதுடெல்லி:
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல் இன்று மாலை ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள நிகாம்போத் காட் இடுகாட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியபோது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பெருமழைக்கு இடையில் நிகாம் போத் காட் இடுகாட்டில் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சுமார் 5 மணியளவில் ஷீலா தீட்சித்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அங்கு நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.