மோர்கன் சதம் வீண்: 328 ரன்னை சேஸிங் செய்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து

இங்கிலாந்துக்கு எதிராக 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 329 இலக்கை எளிதாக எட்டி அயர்லாந்து ஆறுதல் வெற்றி பெற்றது.
சதம் அடித்த அயர்லாந்து வீரர்கள் ஸ்டிர்லிங், பால்பிரைன்
சதம் அடித்த அயர்லாந்து வீரர்கள் ஸ்டிர்லிங், பால்பிரைன்
Published on

இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு ஆட்டங்களில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

நேற்று 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5. ஓவரில் 328 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கேப்டன் இயன் மோர்கன் சிறப்பாக விளையாடி 84 பந்தில் 15 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 106 ரன்கள் குவித்தார். டாம் பேண்டன் 51 பந்தில் 58 ரன்களும், டேவிட் வில்லே 42 பந்தில் 51 ரன்களும் விளாசினர்.

பின்னர் 329 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக பால் ஸ்டிர்லிங், காரேத் டேலனி ஆகியோர் களம் இறங்கினர். டேலனி 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து பால் ஸ்டிர்லிங் உடன் அண்ட்ரூ பால்பிரைன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். பால் ஸ்டிர்லிங்  128 பந்தில் 142 ரன்களும், பால்பிரைன் 112 பந்தில் 113 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இருவரும் ஆட்டமிந்தபோது அயர்லாந்து 44.3 ஓவரில் 279 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 33 பந்தில் 50 ரன்கள் தேவைப்பட்டது. ஹாரி டெக்டர் 26 பந்தில் 29 ரன்களும், கெவின் ஓபிரைன் 15 பந்தில் 21 ரன்களும் அடிக்க 49.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com