

வேலூர்:
மேற்கு திருபுரா மாநிலத்தை சேர்ந்தவர் மத்திலால் தேப்நாத். இவர் தனது உறவினர் ஒருவருடன் சிகிச்சைக்காக சில நாட்களுக்கு முன்பு வேலூர் வந்தார். இவர்கள் 2 பேரும் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியுள்ளனர்.
நேற்று காலை ஆஸ்பத்திரிக்கு செல்ல ஆற்காடு ரோட்டில் நடந்து வந்தார். அப்போது அங்கிருந்த 4 திருநங்கைகள் இவர்கள் இருவரையும் மடக்கி எலுமிச்சை பழத்தால் திருஷ்டி கழித்து விட்டு பணம் கேட்டுள்ளனர். அதற்குள் மத்திலால் தேப்நாத் ரூ.10 கொடுத்துள்ளார். ஆனால் அத்தொகை போதாது என்று கூறி திருநங்கைகளிடம் தான் வைத்திருந்த பர்சை எடுத்து காட்டியுள்ளார்.
அந்த பர்சில் கற்றை கற்றையாக பணம் இருந்ததை பார்த்ததும் திருநங்கைகளில் ஒருவர் அந்த பர்சை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர்கள் 2 பேரும் கூச்சலிட்டுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் ஓடிவந்து 3 திருநங்கைகளை சுற்றி வளைத்தனர்.
தன்னுடன் இருந்த 3 பேரும் போலீசில் சிக்கியதை தெரிந்து கொண்டு தப்பி ஓடிய திருநங்கையும் ஸ்டேசனுக்கு வந்தார். இதையடுத்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து வேலூரை சேர்ந்த திருநங்கைகளான வித்யா (வயது22), கலை (21), ஆனந்தி (21), சொர்ணா (21) ஆகியோரை கைது செய்தனர்.
வடமாநில வாலிபர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ.26 ஆயிரத்தை திருநங்கையிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்து மத்திலால் தேப்நாத்திடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட 4 திருநங்கைகளும் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள தனி அறையில் அடைக்கப்பட்டனர்.