

டெல்லி:
ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி. இவர் அந்த கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
மிசா பாரதியும் அவரது கணவர் சைலேஷ்குமாரும் ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் பணபரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. மிசா பாரதி ரூ.8000 கோடி அளவுக்கு பண பரிமாற்றம் மோசடி செய்து இருப்பதாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இதனை அடுத்து, மிசா பாரதி மற்றும் அவரது கணவர் பெயரில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதுதொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பாட்டியாலா கோர்ட்டில் மே 7-ம் தேதி ஆஜர் ஆகுமாறு சிபிஐ சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் மார்ச் 31-ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மிசா பாரதி அவரது கணவர் மற்றும் பணமோசடிக்கு உதவி செய்ததாக கூறப்படும் தொழிலதிபர்கள் சுரேந்திர ஜெயின் மற்றும் விரேந்தர் ஜெயின் ஆகியோர் இன்று டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரனையை வரும் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். பணமோசடி வழக்கில் மிசாபாரதி மற்றும் அவரது கணவர் ஆகியோர் ஏற்கனவே நிபந்தனை ஜாமின் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Moneylaundering #MisaBharti