

பல்லடம்:
பீகார் மாநிலம் சம்ஸ்தீப்பூரை சேர்ந்தவர் வீர்சங்கர் சக்னி(வயது25). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் க. அய்யம் பாளையத்தில் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருடன் ராம்குமார்(30) தங்கி இருந்தார். இதற்கிடையே ராம்குமாரிடம், வீர்சங்கர் சக்னி ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அதனை நீண்ட நாட்கள் ஆகியும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்ததும் ராம்குமாரும், வீர்சங்கர் சக்னியும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தினர். அப்போது ராம்குமார் தனது பணத்தை கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டு தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ராம்குமார் அங்கிருந்த பீர்பாட்டிலை எடுத்து வீர்சங்கர் சக்னியின் தலையில் அடித்தார். பின்னர் பீர்பாட்டிலால் அவரின் வயிற்றில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய வீர்சங்கர் சக்னியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.