ஈராக் நாட்டுக்கு புதிய பிரதமர் - முகமது தவுபிக் அலாவி நியமனம்

ஈராக்கின் புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்பு துறை மந்திரி முகமது தவுபிக் அலாவியை, அதிபர் பர்ஹாம் சாலி நியமித்துள்ளார்.
ஈராக் புதிய பிரதமர் முகமது தவுபிக் அலாவி
ஈராக் புதிய பிரதமர் முகமது தவுபிக் அலாவி
Published on

ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து, பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு நடத்திய போராட்டத்தை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுமார் 400 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

ஆனாலும் மக்களின் போராட்டம் ஓயாமல், மாறாக நாளுக்குநாள் மேலும் தீவிரமடைய தொடங்கியது. இது அப்துல் மஹ்திக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, கடந்த நவம்பர் மாத இறுதியில் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு நாடாளுமன்றத்தால் முன்மொழியப்பட்ட பிரதமர் வேட்பாளர்களை நிராகரித்த போராட்டக்காரர்கள், மக்களுக்கு ஆதரவான நபரை பிரதமர் பதவியில் அமர்த்த வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈராக்கின் புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்பு துறை மந்திரி முகமது தவுபிக் அலாவியை, அதிபர் பர்ஹாம் சாலி நியமித்துள்ளார். அவரது தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. முகமது தவுபிக் அலாவி பிரதமராக பொறுப்பேற்ற உடனே, அரசுக்கு எதிராக நடந்து வரும் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com