

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் முகமதுசமி. இவரது மனைவி ஹசின் ஜகான்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முகமதுசமி மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். சமி அவரது சகோதரர், உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார்.
அதோடு சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் ஹசின் ஜகான் குற்றம் சாட்டினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டு அனைத்தையும் அவர் மறுத்து இருந்தார். மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தான் யாருடனும் சேர்ந்த சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் சமி தெரிவித்தார்.
இதற்கிடையே மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் முகமதுசமி மீது கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். கொலை முயற்சி, குடும்ப வன்முறை, குற்றசதி, காயப்படுத்துதல், பலாத்காரம் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவாகி இருக்கிறது.
முகமதுசமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பதால் ஐ.பி.எல். போட்டியில் அவர் ஆடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 11-வது ஐ.பி.எல்.போட்டி ஏப்ரல் 7-ந்தேதி தொடங்குகிறது.
முகமதுசமி ஐ.பி.எல்.லில் டெல்லி டேவில்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். வழக்கு பதிவாகி இருப்பதால் அவர் இடம் பெறுவது பற்றி டெல்லி அணி நிர்வாகம் மறுஆய்வு செய்து வருகிறது. இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சந்தித்து சட்ட ஆலோசனை கேட்க இருக்கிறது.