ஐ.நா. சபையில் பிரதமர் மோடி 27-ந்தேதி உரை நிகழ்த்துகிறார்

உலக தலைவர்கள் கலந்து கொள்ளும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் 74-வது கூட்டம் வருகிற 24-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவு மந்திரிகள் கலந்துகொள்கிறார்கள். சர்வதேச அளவிலான பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

முதல் நாள் 24-ந்தேதி காலை பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசுகிறார். கூட்டத்தில் பிரதமர் மோடி 27-ந்தேதி உரையாற்றுகிறார்.

மோடி முதன் முதலாக 2014-ம் ஆண்டு ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று அவரது தலைமைல் மீண்டும் அரசு அமைந்ததை தொடர்ந்து, அவர் இப்போது 2-வது முறையாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்.

27-ந்தேதி மோடி பேசுவதற்கு முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றுகிறார்.

பொதுச்சபை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக 23-ந்தேதி பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்துக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஏற்பாடு செய்து உள்ளார். அந்த கூட்டத்திலும் மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயார்க் செல்லும் பிரதமர் மோடி அங்கு ஒரு வாரம் தங்கி இருக்கிறார். ஐ.நா. பொதுச்சபை கூட்டம் தவிர பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.

நியூயார்க் நகரில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டுக்கான ‘குளோபல் கோல்கீப்பர்’ என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்தியாவில், சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி செயல்படுத்தியதற்காக மோடிக்கு அந்த அறக்கட்டளை இந்த விருதை வழங்கி கவுரவிக்கிறது.

25-ந்தேதி புளூம்பெர்க் குளோபல் வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவாக நியூயார்க் நகரில் ஓல்டு வெஸ்ட்புரி பல்கலைக்கழக வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள காந்தி அமைதி பூங்காவையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com