

உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சன்வே பகுதியில் மாநிலத்திலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை மூலம் 75 மெகாவாட் மின்சாரம் மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு 4 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தன் மனைவியுடன் இன்று காலை விமானத்தில் வாரனாசி வந்தடைந்தார். அவரை பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசம் மாநில கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று வரவேற்றனர். இதையடுத்து, பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இணைந்து சூரிய மின்சக்தி ஆலையை திறந்து வைத்தனர்.
அதன்பின் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் கலந்து கொள்ள உள்ளார். நேற்று, டெல்லியில் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பை மோடி மற்றும் இம்மானுவேல் மெக்ரான் இணைந்து தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #modi #EmmanuelMacron #solarpowerplant #tamilnews