ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கஜகஸ்தான் சென்றார் மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று கஜகஸ்தான் சென்றடைந்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு கஜகஸ்தான் தலைநகர் அஸ்தனாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கஜகஸ்தான், ரஷ்யா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பில் பார்வையாளராக இருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் உறுப்பினராக சேர தீவிர முயற்சி எடுத்து வந்தன. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் உறுப்பினர்களாக சேர்த்து கொள்ள ஷாங்காய் அமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி கஜகஸ்தான் சென்றடைந்தார். அஸ்தானா விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாகிஸ்தான் பிரதமர் நாவாஸ் ஷெரீப்பும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

