ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை- தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு

இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நான் ஐ.நா. சபையில் பேசுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி
Published on

நியூயார்க்:

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் 76வது அமர்வில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

கடந்த ஒன்றரை ஆண்டாக உலகம் முழுவதும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் இந்த ஐ.நா. பொது சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதை 12 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் செலுத்தலாம். ஒரு எம்ஆர்என்ஏ தடுப்பூசி தயாரிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகளும் உருவாக்கி வருகின்றனர்.

இந்தியாவில் தடுப்பூசிகளை தயாரிக்க வரும்படி உலகெங்கிலும் உள்ள அனைத்து தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். 

பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளம். இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நான் ஐ.நா. சபையில் பேசுகிறேன். 

அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் பல்வேறு திட்டங்களை இந்திய அரசு வடிவமைத்துள்ளது. ஏழை மக்களுக்கு வீடுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு போன்றவற்றை அரசு அளித்து வருகிறது. நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களை ட்ரோன் மூலம் கண்காணித்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவீடு செய்து உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அனைவருக்கும் வளர்ச்சி கிடைக்கவேண்டும் என்ற நோக்கம் ஜனநாயகத்தின் மூலம் சாத்தியமாகிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com