குழந்தை கடத்தல் வதந்தி- டெல்லி போலீசை வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

குழந்தை கடத்தல் வதந்தியால் வழக்கு விசாரணை தொடர்பாக உத்திர பிரதேசம் வந்த டெல்லி போலீசாரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

லக்னோ:

குழந்தை கடத்தல் பீதி தற்போது நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில் தொடங்கி தற்போது உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி என வட மாநிலங்களிலும் தீவிரமாகியுள்ளது.

இதற்கு போலி வீடியோக்கள் மற்றும் வதந்தி தான் முக்கிய காரணமாக உள்ளது. சமூக வலைதளங்களில் இவற்றை பரப்பி சிலர் மக்களை பீதியில் ஆழ்த்துகிறார்கள். இந்த குழந்தை கடத்தல் வதந்திகளால் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள வெல்கம் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் சிலர் வரதட்சணை புகார் ஒன்று குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தர பிரதேச மாநிலத்தின் பெரெய்லி மாவட்டத்தில் உள்ள பூடா கிராமத்துக்கு சென்றனர். போலீசார் அனைவரும் சாதாரண உடையணிந்து வாடகை காரில் சென்றனர்.

இதற்கிடையே குழந்தை கடத்தல் கும்பல் ஒன்று சுற்றுவட்டார பகுதிகளில் உலாவுவதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரவி வந்தன. இதனால், காரில் வந்தவர்களை திடீரென இடைமறித்த கிராம மக்கள் போலீசாரை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உள்ளூர் போலீசார் கிராம மக்கள் பிடியில் இருந்த டெல்லி போலீசாரை மீட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com