நாமக்கல் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

நாமக்கல் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண், 2 குழந்தைகளையும் தேடி வருகிறார்கள்.
நாமக்கல் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
Published on

நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். (வயது 35). கல் உடைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி லதா (29). இவர்களுக்கு நாகலட்சுமி(9) என்ற பெண் குழந்தையும், சபரி வாசன்(7) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இதில் குழந்தை நாகலட்சுமி சிவாஜி நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பும் சபரிவாசன் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி லதா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு திடீரென மாயமானார். அவர் குழந்தைகளுடன் எங்கு சென்றார்? என்ன ஆனார் ? என்பது பற்றி இதுவரை தெரியவில்லை.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளிலும் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அதிர்ச்சியும், சோகமும் அடைந்த கணவர் பாலமுருகன் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப்பதிவு செய்து மாயமான லதாவையும், இரண்டு குழந்தைகளையும் தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com