

புதுடெல்லி:
டெல்லி சாணக்கியபுரியில் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில்தான் அனைத்து மாநில குற்றப்பிரிவு விசாரணைப்பிரிவும் செயல்பட்டு வருகிறது.
இங்கு நேற்று மதியம் 12 மணி அளவில் திடீரென தீயுடன் கூடிய கரும்புகை கிளம்பியது. இதுபற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.‘இந்த விபத்தில் பெரிய அளவில் சேதம் இல்லை என்றும், மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக’ தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீ விபத்து நடந்த குற்றப்பிரிவு அலுவலகத்தில்தான், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.