பிளாஸ்டிக் அரிசி விற்பனை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி என்பதே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.
பிளாஸ்டிக் அரிசி விற்பனை பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

தமிழ்நாடு மாநில சுகாதார திட்ட அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களுக்கு கலப்படமில்லாத தரமான உணவு பொருட்களை விற்பனை செய்வது குறித்து வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்வதாக தகவல் பரவியது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரிசி மாதிரிகள் எடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 140-க்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுத்து 6 ஆய்வகங்களில் பரிசோதனை நடந்தது. ஆய்வில் பிளாஸ்டிக் அரிசி என்பது உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி என்பதே இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம். 32 மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

பிளாஸ்டிக் அரிசி பற்றிய தகவல் கிடைத்தால் எந்த நேரத்திலும் களத்தில் இறங்க அவர்கள் தயாராக உள்ளனர்.

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் குறித்த நடைமுறை சிக்கல்கள் தொடர்பான வணிகர்களின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறையின் கருத்துக்களை பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி உரிய தீர்வு காணப்படும்.

தரமற்ற கலப்பட உணவு பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தால் பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com