

டெங்கு, சிக்குன்குனியா போல ‘ஜிகா’ வைரசால் உயிருக்கு ஆபத்து இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘ஜிகா’ வைரஸ் ஒரு வாலிபரை தாக்கியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு எல்லாவிதமான சோதனைகள் நடத்தப்பட்டு ‘ஜிகா’ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே ‘ஜிகா’ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது சுகாதாரத்துறையின் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது.
அந்த வாலிபர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் குணமாகி விட்டார்.
டெங்கு, சிக்குன்குனியா போல ஜிகா வைரஸ் உயிர் இழப்பை ஏற்படுத்த கூடியவை அல்ல. அது ஒரு சாதாரண காய்ச்சல்தான். கொசுவினால் இந்த வைரஸ் பரவுகிறது.
அதனால் பொதுமக்கள் பீதியோ, அச்சமோ அடைய தேவையில்லை. உயிர் இழப்பு எந்த நேரத்திலும் ஏற்படாது.
ஆனாலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ மனைகளிலும் மருந்து, மாத்திரைகள் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க எல்லா மட்டத்திலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவை ஒட்டியுள்ள மாவட்ட எல்லைகளில் டெங்கு சவாலாக உள்ளது. தொற்று தடுப்பு விரைவு குழுக்கள் அமைக்கப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு மருத்துவ கல்லூரிகள், மாவட்ட தலைநகர மருத்துவ மனைகள், தாலுகா மருத்துவ மனைகளில் காய்ச்சல் வார்டு தயார்படுத்தப்பட்டுள்ளன.