

ஊட்டி:
நீலகிரி கோடை விழாவின் நிறைவு விழா ஊட்டியில் இன்று மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஊட்டிக்கு இன்று வந்தார்.
பின்னர் அவர் ஊட்டி படகு இல்லத்துக்கு சென்று பார்வையிட்டார். அவருடன் மாவட்ட கலெக்டர் சங்கரும் சென்றார். அப்போது படகு இல்லத்தில் ஆகாய தாமரை, பிளாஸ்டிக் கழிவுகள் ஏரியில் கலக்காமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்,
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊட்டியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்க முழு முயற்சி மேற்கொள்ளப்படும். நிலுவையில் உள்ள ரோப் கார் திட்டம் நிறைவேற முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இதனால் பார்க்கிங் வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவை சிறப்பாக நிறைவேற்ற கோரி கலெக்டரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
இதையடுத்து பைக்காரா அணை படகு இல்லத்தை பார்வையிட அமைச்சர் புறப்பட்டு சென்றார்.