சுனாமி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை

சுனாமி குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சுனாமி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை
Published on

சென்னை:

சென்னை எழிலகத்தில் பேரிடர் மாநில கட்டுப்பாட்டு அறையில் முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் வருவாய் துறை செயலாளர் சந்திரமோகன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டி வருமாறு:-

தேசிய அளவில் முப்படைகள், தேசிய பேரிடர் மீட்பு குழு ஆகியவை சென்னை உள்பட 13 கடலோர மாவட்டங்களில் சுனாமி ஏற்பட்டால் எப்படி பாதுகாப்பு மேற்கொள்வது என்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. சுனாமி வருவதற்கு 2.30 மணி நேரத்திற்கு முன்பு தகவல் கிடைக்கப்பெறும் சூழ்நிலையில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது பயிற்சியாக அளிக்கப்பட்டுள்ளது.

சுனாமி ஏற்படும் சூழல் தொடர்பாக கண்காணிக்க அதிநவீன கருவிகளை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. மத்திய அரசு கண்காணித்து நமக்கு தகவல்கள் அளிக்கும் பட்சத்தில், சுனாமி பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து நிலைகளிலும் தமிழக அரசு தயாராக உள்ளது. பேரிடர் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக 4,399 இடங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது.

சுனாமி பற்றிய தகவல் வந்ததும், முதல் தகவலை அரசிடம் இருந்து பெறும் நபர்களாக 23,500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6,500 பேர் பெண்கள். எந்தவித பாதிப்பாக இருந்தாலும் அதனை இந்த பெண்கள் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். சுனாமி தொடர்பாக மக்கள் அச்சம் அடைய தேவையில்லை.

சுனாமி குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுனாமி வந்தால்கூட மக்களை மீட்பது, நிவாரண பணிகள் மேற்கொள்வது என அனைத்து துறைகளையும் அரசு தயார்நிலையில் வைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com