ஜீபூம்பா என்றவுடன் எய்ம்ஸ் வந்துவிடாது- ஆர்.பி.உதயகுமார்

ஜீபூம்பா என்றவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடாது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதும் திட்டப்பணிகள் தொடங்கும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
அமைச்சர் ஆர்பி உதயகுமார்
அமைச்சர் ஆர்பி உதயகுமார்
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள மேலக்கோட்டை கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான விழாவை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண் குழந்தை பாதுகாப்பு தினத்தை முதல்வர் அறிவித்து அரசாணை வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது

எய்ம்ஸ் மருத்துவமனையை பொருத்தவரையில் முதல்வர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவும், அவர் எடுத்துக்கொண்ட விடாமுயற்சி காரணமாகவும் தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் திட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து திட்டத்திற்கான முன்னேற்பாடு தேவைகளான சாலை வசதிகள், பாதுகாப்பு சுற்றுச்சூழல் வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடைபெறவில்லை என்று பொய் பிரசாரம் செய்து வருபவர்கள், சந்தேகம் இருப்பவர்கள் நடைபெற்று வரும் இடத்திற்கு வந்து பார்வையிட்டு தற்போது எப்படி நடைபெற்று வருகிறது என்பதை காண முடியும்.

விமான போக்குவரத்து, ரெயில் முனையம் அமைப்பது போன்ற அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திய பின்னரே திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும், ஜீபூம்பா என்றவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடாது.

32 வருவாய் மாவட்டங்கள் அறிவித்தும், லட்சக்கணக்கான மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கியதன் மூலம் முதல்வர் தொடர்ந்து மக்களை நேரடியாக சந்தித்தது கின்னஸ் சாதனையாக இருந்து வருகிறது. அதனை எதிர்க்கட்சித் தலைவர் தொட்டுக் கூட பார்க்க முடியாது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன் ஒன்றிய செயலாளர் அன்பழகன் முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன் நிர்வாகிகள் வழக்கறிஞர் முத்துராஜா அன்னக்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com