சென்னையில் அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென ஆய்வு செய்தார். #SPVelumani
சென்னையில் அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
Published on

சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகங்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.8.50 லட்சம் வரை உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென ஆய்வு செய்தார். அங்கு வழங்கப்படும் உணவு மற்றும் அதன் தரம் குறித்து சோதனை மேற்கொண்டார்.

மேலும், அங்கு தயாரிக்கப்படும் உணவு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும், வீட்டில் தயாரிப்பது போன்ற சுவையில் இருக்க வேண்டும் என ஊழியர்களிடம் தெரிவித்த அமைச்சர் வாடிக்கையாளர்களை நல்ல முறையில் உபசரிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘அம்மா உணவகம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த திட்டத்தை பாராட்டியது மட்டுமின்றி, தங்கள் மாநிலங்களிலும் இதனை செயல்படுத்தியுள்ளன’ என்றார்.

இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் ஆர்.லலிதா, பி.மதுசுதன் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com