

ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே தேவதானத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி பிரச்சனையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டி ஆலோசனை செய்துள்ளார். செயல்படும் அரசு என்பதால்தான் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி உள்ளனர்.
ரஜினி, கமல்ஹாசன் இருவரும் மறைமுகமாக கூட்டணி வைத்தாலும், நேரடியாக கூட்டணி வைத்தாலும் இரண்டுமே உருப்படாது. எங்களது ஆட்சியை கமல்ஹாசன் தொடர்ந்து விமர்சனம் செய்வதால் அவரை நாங்கள் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்கிறோம்.
அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் கமல்ஹாசனை கருவிலேயே அழிக்கத்தான் நாங்கள் பார்ப்போம். கமல்ஹாசன் நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழக கலாச்சாரத்திற்கும் எதிராக உள்ளது.
கமல்ஹாசன் கட்சிக்கு தலைவராக இருந்தால் சமூக சீரழிவு, கலாச்சார சீரழிவு ஏற்படும்.
எனவே அவரை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ரஜினிக்கு அப்படி ஒரு சூழ்நிலை கிடையாது. கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்ததால் அவருக்குரிய மரியாதை பாதி குறைந்து விட்டது. இன்னும் 2 மாதத்தில் மீதியும் குறைந்துவிடும்.
இவ்வாறு அவர் பேசினார். #Tamilnews