

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்திருந்தால் இடம் கிடைக்காமல் தடுத்து இருக்கலாம் என தெரிவித்தார். கருணாநிதிக்கு அரசு மரியாதை கிடைத்தது அதிமுக போட்ட பிச்சை என்றும் கூறினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபற்றி அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது:-
எங்கள் அம்மாவை பற்றி சொன்னால் நிச்சயம் பதிலடி தருவோம். நினைவிடத்தை இடிப்போம் என்று கூறியது கடுமையான வார்த்தை இல்லையா? மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் அம்மாவின் நினைவிடத்தை இடிப்போம் என்று சொன்னால் இதைவிட கடுமையான வார்த்தையை சொல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.