சிவகங்கை அரசு பெண்கள் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் - அமைச்சர் தகவல்

சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை அரசு பெண்கள் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் - அமைச்சர் தகவல்
Published on

சிவகங்கை:

சிவகங்கை நகர் மேலூர் ரோட்டில் பழமையான அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கூடத்தில் தற்போது 753 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்திற்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும், மாணவிகளுக்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்றும் கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் லதா ஆகியோர் நேற்று சிவகங்கை அரசு பெண்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுடன் முதன்மைக்கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்டக்கல்வி அதிகாரி சகிதா, சிவகங்கை கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர் உமாராணி ஆகியோர் சென்றனர்.

பின்னர் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்ததாவது:-

சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தற்போது கூடுதலாக 4 வகுப்பறை கட்டிடங்கள் தேவை என்று தெரிவித்தனர்.

அத்துடன் பள்ளிக்கு விளையாட்டு மைதானமும் தேவை என்றனர். இதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. விரைவில் இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com