வேப்பூர் கூட்டுரோடு அருகே புளிய மரத்தில் மினிலாரி மோதல்- டிரைவர் பலி

வேப்பூர் கூட்டுரோடு அருகே சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மினிலாரி மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
புளியமரத்தில் மோதிய மினி லாரி.
புளியமரத்தில் மோதிய மினி லாரி.
Published on

வேப்பூர்:

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பைத்தல்துரை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது 24). மினிலாரி டிரைவர்.

நேற்று இரவு இவர் சின்னசேலத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு நெல் அறுவடை எந்திரத்தை மினிலாரியில் ஏற்றி சென்றார். அவருடன் அவரது நண்பர்கள் ராஜவேல் (28), மணிகன்டன் (25) ஆகியோர் சென்றனர். மினிலாரி கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோடு அருகே விருத்தாசலம் சாலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென்று மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் டிரைவர் பாண்டிதுரை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். 

மினிலாரியில் வந்த ராஜவேல், மணிகன்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து வேப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பாண்டிதுரை உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com