உளுந்தூர்பேட்டை அருகே மினிலாரி மோதி 2 விவசாயிகள் பலி

உளுந்தூர்பேட்டை அருகே மினிலாரி மோதிய விபத்தில் 2 விவசாயிகள் பரிதாபமாக இறந்தனர்.
ராமமூர்த்தி
ராமமூர்த்தி
Published on

உளுந்தூர்பேட்டை:

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இருந்து மினி லாரி ஒன்று நரியன் ஓடை வழியாக உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. மினிலாரியை உளுந்தூர்பேட்டை அடுத்த காந்திநகரை சேர்ந்த அய்யப்பன் (வயது 25) என்பவர் ஓட்டினார். நரியன்ஓடை சந்திப்பு பகுதியில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிக்கெட்டு ஓடிய மினி லாரி, எதிரே அடுத்தடுத்து வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விட்டு சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நரியன்ஓடை பகுதியை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி (37) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அதே ஊரைச் சேர்ந்த விவசாயி அழகப்பன் (45) படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே விபத்தில் காயமடைந்த 2 மோட்டார் சைக்கிள்களிலும் வந்த செல்வம், செல்வராஜ், காமராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ராமமூர்த்தி, அழகப்பன் ஆகியோரின் உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விபத்து தொடர்பாக அய்யப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com