மிகப்பெரிய தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் - மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மிகப்பெரிய தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் - மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
Published on

இலங்கையில் சமீபத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உதவியுடன் தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 252 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு தலைவனாக செயல்பட்ட ஜக்ரன் ஹசீம் என்ற பயங்கரவாதியுடன் கோவை வாலிபர்கள் சிலர் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தேசிய விசாரணைக் குழுவினர் இலங்கைக்கும், கோவைக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.

கோவையைச் சேர்ந்த சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இலங்கை பயங்கரவாத ஹசீமுக்கும் இணையத்தளம் மூலம் தொடர்பு இருப்பதும், அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதி இயக்கத்தின் சித்தாந்த கொள்கைகளை அப்பாவி ஏழைகளிடம் பரவச் செய்து, அந்த இளைஞர்களை மூளை சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்தது. இவை தவிர தமிழகம் மற்றும் கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பாணியில் தாக்குதல் நடத்தவும் அவர்கள் தயாராகி வந்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து 6 முஸ்லிம் இளைஞர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே தமிழக போலீசாரும் கோவையில் தீவிர விசாரணை நடத்தி 4 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டில் நாசவேலை செய்ய திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

இந்த நிலையில் கோவையில் உள்ள மூன்று இளைஞர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளாக மாறி இருக்கிறார்கள் என்றும் அவர்களால் தென் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த மூன்று பயங்கரவாதிகளும் “அபு அல் கிடல்” எனும் பயங்கரவாத அமைப்பை நடத்தி வருகிறார்கள். அவர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களில் அதாவது கொங்கு மண்டலத்தில் கைவரிசை காட்ட அந்த பயங்கரவாதிகள் தயாராகி வருவதாக மத்திய உளவுத்துறை குறிப்பிட்டு கூறியுள்ளது. ஆனால் மேற்கு மாவட்டங்களில் எந்த நகரில், எந்த நேரத்தில் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய உளவுத்துறை சுட்டிக்காட்டவில்லை.

என்றாலும் கோவையில் உள்ள இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பயங்கரவாத தகவல் பரிமாற்றங்கள் செய்து இருப்பதை மத்திய உளவுத்துறை கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளது. வாய்ஸ் மெயில், வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி பரிமாற்றம் மூலமாகவும் அவர்கள் தகவல் பரிமாற்றம் செய்துள்ளனர்.

பயங்கரவாத இயக்கத்தில் அதிக அளவில் புதிய உறுப்பினர் சேர்ந்து இருப்பதும், வெடிகுண்டு தாக்குதல்களை எப்படி நடத்த வேண்டும் என்று அவர்கள் பேசி இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும்போது வாகனங்கள், சிறிய ரக ஆயுதங்களை எப்படி பயன்படுத்துவது என்ற பயிற்சியையும் அவர்கள் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் உதவிகளை கோவையில் உள்ள இளைஞர்கள் பெற்றிருப்பதால் அவர்கள் தமிழகத்தில் உள்ள இந்து ஆலயங்கள், மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், ஷாப்பிங் மால்கள், நட்சத்திர ஓட்டல்கள், சுற்றுலா தலங்களில் மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முக்கிய ஆலயங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் முக்கிய நிலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்கள் பட்டியலில் உள்ளவர்களை அதிக அளவில் நெருங்கி கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இளைஞர்களின் நகர்வுகளை வைத்து உடனுக்குடன் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்க போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. படகுகளின் வருகைகளும் கண்காணிக்கப்படுகின்றன. இதற்கிடையே புழல் ஜெயிலில் உள்ள இஸ்லாமிய பழமைவாதிகளை கடந்த 2 ஆண்டுகளில் சந்தித்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com