ராமநாதபுரத்தில் கைதான 3 பேரின் பயங்கரவாத பின்னணி - திடுக்கிடும் தகவல்

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையை தொடர்ந்து ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரின் பயங்கரவாத பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்
Published on

மதுரை:

குமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 8-ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக அப்துல் சமீம், தவுபீக் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான பயங்கரவாதிகளில் ஒருவரான அப்துல்சமீமின் கூட்டாளிகளான காஜாமொய்தீன், சையது அலி நவாஸ் ஆகியோர் டெல்லியில் கைதானார்கள்.

பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக பெங்களூரில் 3 பேர் கைதானார்கள். காஞ்சீபுரத்திலும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி சிம்கார்டுகளை சப்ளை செய்தவர்களை பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் தப்பி செல்வதற்கும், அவர்கள் பதுங்கி இருப்பதற்கு பலர் உதவி செய்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்திலும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தவர்கள் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.

தேவிபட்டினத்தில் உள்ள பள்ளி அருகே மைதானத்தில் 4 பேர் சந்தேகப்படும் படியாக பேசிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் 4 பேரும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரர் தலைமையிலான போலீசார் விரைந்து செயல்பட்டு 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர்களது கூட்டாளி ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

இவர்கள் கீழக்கரை அருகே உள்ள நத்தத்தை சேர்ந்த புறாக்கனி, கடலூர் மாவட்டம் கோண்டூர் காலனியைச் சேர்ந்த முகமது அலி, விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் மணல்மேட்டை சேர்ந்த முகமது அமீர் என்பது தெரியவந்தது.

தப்பி ஓடியவரின் பெயர் தாவூது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். சேக் தாவூது, என்.ஐ.ஏ. வழக்கில் கைதாகி தற்போதுதான் ஜாமீனில் வந்துள்ளார். அனைவரும் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை திரட்டி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இளைஞர்கள் சிலரை மூளைச்சலவை செய்து ஐ.எஸ். இயக்கத்துக்கு சேர்க்க முயற்சி மேற்கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைதான 3 பேரிடமும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீமிற்கு இவர்கள் பணப்பரிமாற்றம் செய்து இருக்கும் தகவலும் தெரிய வந்துள்ளது.

சிறையில் இருக்கும் கீழக்கரை முகமது ரிபாஸ் என்பவரோடு இணைந்து இவர்கள் செயல்பட்டுள்ளனர்.

வாட்ஸ்-அப் குழு மூலம் இளைஞர்களை திரட்டி அவர்களுக்கு மூளைச்சலவை செய்வதோடு, இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக செயல்படுபவர்களை கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்டவும் திட்டமிட்டு உள்ளனர்.

கைதான 3 பேரின் செல்போன்களில் இருந்து இதற்கான வாட்ஸ்-அப் ஆடியோ மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதான 3 பேர் மீதும் 153ஏ, 153பி, 120பி, 18, 18பி, 38,39 என 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தப்பி ஓடிய சேக்தாவூதை பிடிக்க தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com