அயர்லாந்து பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தேர்வு

அயர்லாந்து பாராளுமன்றத்தின் கீழவையில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் மைக்கேல் மார்டின் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். மேலும மைக்கேல் மார்ட்டின் வருகிற 2022 ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவியில் இருப்பார்.
மைக்கேல் மார்ட்டின்
மைக்கேல் மார்ட்டின்
Published on

டப்ளின் :

அயர்லாந்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசை அமைப்பதில் சிக்கல் எழுந்தது. கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. இதற்காக நாட்டின் முக்கிய இருபெரும் கட்சிகளான பியானா பெயில் மற்றும் பைன் கெயில் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ஒப்புக் கொண்டன.

இந்த நிலையில் பிரதமரை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு அந்நாட்டு பாராளுமன்றத்தின் கீழவையில் நடைபெற்றது. பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்டின் பிரதமர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

கீழ் அவையில் மொத்தமுள்ள 160 உறுப்பினர்களில் 93 பேர் மைக்கேல் மார்ட்டினுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 63 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். 3 பேர் ஓட்டெடுப்புக்கு வரவில்லை. கிழவியின் சபாநாயகருக்கு ஓட்டு போடும் அதிகாரம் கிடையாது. இதன் மூலம் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் மைக்கேல் மார்டின் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் புதிய மந்திரி சபை அமைக்கப்பட்டது. 15 மந்திரிகள் பதவி ஏற்றனர். மைக்கேல் மார்ட்டின் வருகிற 2022 ஆம் ஆண்டு வரை பிரதமர் பதவியில் இருப்பார் என்றும் அதன் பிறகு பைன் கெயில் கட்சியின் தலைவர் லியோ வரட்கரிடம் பொறுப்பை ஒப்படைப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com