

மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 9-ந் தேதி மேட்டூர் அணைக்கு 1970 கனஅடி தண்ணீர் வந்தது.
பின்னர் மழை குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று 479 கன அடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து 603 கன அடியாக இருந்தது.
அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக கடந்த சில நாட்களாக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட்டதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது.
இந்த நிலையில் தண்ணீர் திறப்பு நேற்றிரவு முதல் 500 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று 32.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 32.8 அடியாக சரிந்தது.
விரைவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.