

மேட்டூர்:
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் கடந்த 29-ந் தேதி 4 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது.
இந்த தண்ணீர் தமிழகத்தில் காவிரி நுழைவு வாயிலான ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடந்த 8-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு தண்ணீர்வரத் தொடங்கியது.
தொடக்கத்தில் வினாடிக்கு 200 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று காலை 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை மேலும் அதிகரித்து 3266 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கடந்த 8-ந் தேதி 20.09 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 23.15 அடியாக உயர்ந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர தொடங்கி உள்ளது.
காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து வருவதால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயினருவி, சீனிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் நீர்பாசன துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.