

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது.
இதனால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வந்து கொண்டிருக்கிறது. கடந்த 1-ந்தேதி 20 ஆயிரத்து 495 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 13 ஆயிரத்து 278 கன அடியாக சரிந்தது.
இந்த நிலையில் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து இன்று காலை 16 ஆயிரத்து 605 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கோப்புப்படம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 2-ந்தேதி 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 17 ஆயிரம் கனஅடியாக இருந்தது. மாலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து 21 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இன்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 19 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.