மெட்ரோ ரெயில் பயண கார்டு கட்டணம் ரூ.50 ஆக உயர்வு

மெட்ரோ ரெயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரீசார்ஜ் டிராவல் கார்டுக்கான டெபாசிட் தொகை ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் பயண கார்டு கட்டணம் ரூ.50 ஆக உயர்வு
Published on

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்படுகிறது. முதலில் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை இயக்கப்பட்டது. தற்போது கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா வரை மெட்ரோ ரெயில் சென்று வருகிறது.

மெட்ரோ ரெயில் கட்டணம் ரூ.10 முதல் ரூ. 70 வரை வசூலிக்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு டிராவல் கார்டு (பயண அட்டை) அறிமுகம் செய்யப்பட்டது.

டிக்கெட் எடுக்கும்போது டிராவல் கார்டு கொடுக்கப்படும். அதற்கு டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக டெபாசிட் தொகையாக 10 ரூபாய் கார்டுக்கு வசூலிக்கப்பட்டு வந்தது.

பயணம் செய்த பின் டிராவல் கார்டை நம்மிடமே வைத்து கொண்டு ரீசார்ஜ் செய்தபடி பயணம் செய்யலாம். டிராவல் கார்டு தேவையில்லையென்றால் அதை திரும்ப கொடுத்து விட்டு டெபாசிட் தொகையான ரூ.10-யை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிலையில் டிராவல் கார்டுக்கான டெபாசிட் தொகை ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கருதுகிறார்கள். ஆனால் மெட்ரோ ரெயிலில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை.

இந்த நிலையில் டிராவல் கார்டு டெபாசிட் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஒரு டிராவல் கார்டு தயாரிக்க ரூ.63 செலவாகிறது. அதை வாங்குபவர்கள் மீண்டும் பயணம் செய்வார்கள் என்று ரூ.10 டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டது.

ஆனால் டிராவல் கார்டு வாங்கியவர்கள் மீண்டும் பயணம் செய்யாததால் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் டிராவல் கார்டு டெபாசிட் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com