

திருச்சி:
திருச்சி அருகே உள்ள மாத்தூரை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்து வந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் யார் உணவு வழங்கினாலும் அதனை சாப்பிட்டு விட்டு அங்கேயே ஏதாவது ஒரு ஓரத்தில் இரவு நேரத்தில் தூங்கி வந்தார்.
சம்பவத்தன்று அங்குள்ள ஒரு ஓட்டல் முன் அந்த பெண் அரை நிர்வாண கோலத்தில் ரத்த காயங்களுடன் கிடந்தார். இதுபற்றி உடனடியாக அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்தப் பெண்ணை சிலர் ஆட்டோவில் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
அந்த நபர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் போலீசார் தீவிரமாக இறங்கினர். இதில் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் திருச்சி கீழ வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முஸ்தபா (வயது 41) , விழுப்புரம் மாவட்டம் வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த சிவா (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.