

பெங்களூர் மக்களின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டினால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறையும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த எதிர்ப்புக்கு மத்தியில் மேகதாது அணை தொடர்பான செயல்திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி தமிழகம் மற்றும் கேரள அரசுகளை மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.